கடந்த 13.10.2013 அன்று நடைபெற்ற பெரம்பலூர் பதியம் இலக்கியச் சங்கமத்தில் நடைபெற்ற கவிதை வாசிப்பில் நான் வாசித்த கவிதை.
எது சிலாகிக்க
என்னை கவிதை எழுதி
வரச் சொல்லி
அழைப்பு விடுத்தாய்
?
ஆமாம்சாமி போட்டு
குப்புறக் கவிழ்ந்து
எதன் போதும் நிமிர்ந்து
சிலிர்த்துடாது
குனிந்தே கிடக்கும்
உன் தலையை
துடைத்து தூக்கி
கிரீடம் சூட்ட – என்
வார்த்தைகளை வரச்
சொன்னாயா ?
பதுங்கி மெல்ல
நகரும் பூனையைப் போல்
அதர்மங்களின் பாதையில்
அரவமின்றி
இமைமூடி நடக்கிற
உன் கண்களுக்கு
பீலி கோர்த்து
சாமரம் வீச
அவிழ்த்துப் போட்ட
அம்மணமாய் – என் கவிதைகளை
ஆடைகளின்றி வரச்
சொன்னாயா ?
ரேகைகள் அழிய ரூபாய்
நோட்டுக்களை
எண்ணிக் களைத்து
குவிந்து சூம்பிப் போய்
லஞ்ச சீழ்ப்பிடித்த
உன் கைகளின் விரல்களில்
வெளிறிப் போன குஷ்டங்களை
மறைக்க
கணையாழிப் போல்
சூடிக் கொள்ள – என்
வார்த்தைகளை வரச்
சொன்னாயா ?
நேர்மையின் பாதையில்
சிறுநடையும் பயிலாது
அருவருப்பின் மலங்களின்
மீதமர்ந்த
தொடைகளை தாங்கி
நிற்கும்
கழிப்பறையின் நிலையொத்த
உன் கால்களுக்கு
பரதனின் பாவணையோடு
பாதுகை சூட – என்
வார்த்தைகளை வரச்
சொன்னாயா ?
கோவில் திருவிழாவில்
கவளங்களை உள்வாங்கும்
யாசக யாணையைப்
போன்று
ஆவணங்கள் தொலைந்துப்
போகும்
வழிப்பறியின் நெடும்பாதையிலும்
மழலைகளை வன்புனர்ந்து
முலைகளை அறுத்தெரிந்த
போர்க்களத்திலும்
தொண்டைச் செருமி
இருமாத உன் வாய்களுக்கு
வெண்ணெய் பூசி
களிப்பூட்ட – என்
வார்த்தைகளை வரச்
சொன்னாயா ?
எரியூட்டப்பட்ட
குடிசைகளின் உள்ளிருந்து
மரணமேறிய காயங்களோடு
கதறிய போதும்
சீருடைகளோடு பள்ளிக்கனுப்பி
கரிக்கட்டைகளாய் வெந்துப் போன
மலர்களை நெஞ்சில்
தாங்கி வெடித்து விம்மிய போதும்
அசைவற்ற எருமையின்
தோலொத்த உன் செவிகளுக்கு
ஆனந்த யாழெடுத்து
மீட்ட – என்
வார்த்தைகளை வரச்
சொன்னாயா ?
கொத்துக் குண்டுகளால்
நிலைக் குலைந்து
பிய்த்துதெறித்து
சிதறிய செஞ்சோலை கறித்துண்டுகள் பட்டும்
எல்லைகளில் புகுந்தும்
நாணயங்களை வீழ்த்தியும்
காறித் துப்பிய
எச்சில் முகத்தில் வழிந்தபோதிலும்
குந்திச் சாத்திய
சவத்தையொத்த உன் உடலுக்கு
வாகை மலர்களை சூட
– என்
வார்த்தைகளை வரச்
சொன்னாயா ?
பிணமானாய் என்று
சேதியனுப்பு
அஞ்சலிக் கவிதை
அனுப்பி வைக்கிறேன்.
நன்றி.