Sunday 18 August 2013

நண்பர்கள் போலே வாழ்வதற்கு….

நண்பர்கள் போலே வாழ்வதற்கு….

வாய்ப்பு கிடைக்கிற பிறந்தநாளுக்கெல்லாம் புத்தாடை எடுப்பேன். அதுவும் இப்ப அஞ்சாறு வருஷமாத்தான். நேற்று முன் தினம் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்ததில் மறந்து விட்டு வீட்டுக்கு வந்தவுடன் அவள் கேட்டாள்...

“ ட்ரெஸ் எடுக்கல...”

‘இல்லை... பேசிட்டே மறந்துட்டேன்.. இப்ப என்னா அதுக்கு...? ‘

“ இல்லை பொறந்த நாளுன்னா எடுப்பியே அதான் கேட்டேன்...”

‘ இல்லாட்டியும் நீதான் எடுத்துக் கொடுத்திடுவ...’

“ நான் என்ன சம்பாரிக்கப் போறனா..? .. ம்ஹீக்கும்...’

அடடா..கேக்கற அளவுக்கு நடந்துக்கிட்டோமே..
எடுத்திருக்கலாமோ..?...
திட்டுவாய்ங்கன்னுல்ல நினைச்சோம்...
சரி விடு புது சட்டை போடலைன்னா பொறந்த நாள் போகதா..பொறக்கும்போது புது சட்டை போட்டுக்கிட்டா பொறந்தோம்...?

நேற்று அதான் எனது பிறந்த நாள் காலை . வழக்கமாக பிள்ளைகள் எனக்கு முன் எழுந்து குளித்து முடித்து என்னை எழுப்பி வாழ்த்துச் சொல்வார்கள்...

ம்ஹீக்கும்...ரெண்டும் தூங்குது..சின்ன வாண்டு மேயுது...

சோம்பலாய்.. ’ தேமே ‘ன்னு ... சரி குளிப்போம் என்று டாய்லெட்டுக்குள் நுழைந்து விளக்கி, குளித்து இடுப்பில் கட்டிய துண்டோடு வெளியேறியதுதான் தாமதம்.. சேகுவேராவும், இளைய நிலாவும் இடது கைகளை பின்னால் கட்டிக் கொண்டு... ‘ஹே..’ என்று கத்தி...

“ அப்பா கையைக் குடு..”

“ கையைக் குடுப்பா...” கொடுத்தேன்.

இருவரும் ஒரே குரலில் “ ஹேப்பி பர்த்டே டூ யூ… ” என்று கத்தி மறைத்து வைத்திருந்த இரண்டு புதிய ஆடைகளை ஆளுக்கொன்றாய் கொடுத்தார்கள்.

“ ஏய்…………..” இதற்கு முன்னால் இப்படி ஆனதில்லை…

“ ஏதுடா…? .எப்படா எடுத்தீங்க…? “

‘ அன்னைக்கு ஈரோட்டுக்கு புக் ஃபேர்க்கு போனல்ல அன்னைக்கே அம்மா எடுத்திருச்சு…’

“ நீங்களும் போனீங்களா..? “

‘ நாங்கத்தான் ஸ்கூல் போயிட்டம்ல…’

கைகளில் வாங்கிக் கொண்டு மனைவியைத் தேடினேன்…

“ எங்கடா அம்மா…? ”

‘ அம்மா தோசை ஊத்துதுப்பா… , யெம்மா உன்னைய அப்பா கூப்பிடுறார்….’

ஆனால் அவள் வரவில்லை...

தலைத் துவட்டி பனியன் அணிந்து , புத்தாடையின் விலைப் பட்டியல் கட்டியிருந்த நூலை அவிழ்க்க பற்களால் கடித்தபோது ஏனோ தெரியாமல் , எனது திருமணத்தின் போது அவள் ரவிக்கையில் மாட்டிக் கொண்ட எனது சட்டையை விடுவிக்க பற்களால் கடித்தது நினைவுக்கு வந்தது.

பட்டன் போடும் வேளையில் நினைத்து கொண்டேன், மூன்று வயது குழந்தையை கையில் பிடித்து கடையில போயி எப்பிடி கேட்டிருப்பாள்…?

“ என் புருஷன்னுக்கு பொறந்த நாள்…….ஒரு சட்டை குடுங்கன்னா…..”

நினைத்தால் இனிக்கும் உணர்வோடு நேற்று முழுதும் அவளை அணிந்திருந்தேன்.

No comments:

Post a Comment